

அவிநாசி:
இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பும் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளை அதிகம் உருவாக்கும் நோக்கில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதன்படி ‘தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தரத்தில் உள்ள நகரங்களில் ‘டைடல் பார்க்‘ உருவாக்கப்படும்.
திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் பார்க் உருவாக்கப்படும்‘ என சட்டசபைகூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.அதனடிப்படையில் அவிநாசி அருகே ராக்கியபாளையத்தில், ‘டைடல் பார்க்‘ அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி என பல்வேறு மாவட்டங்களின் மையப்பகுதியாக அவிநாசி உள்ளதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.மொத்தம், 32 கோடி ரூபாய் மதிப்பில், 7 மாடி கட்டடத்தில் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டப்படவுள்ளது.
கட்டுமானப்பணி, எலக்ட்ரிக்கல், பிளம்பிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ‘சென்னை டைடல் பார்க்‘ சார்பில் இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது. வருவாய் துறையினர் கூறுகையில், ராக்கியபாளையத்தில் இரண்டு ஏக்கர் அளவுக்கு ‘மினி டைடல் பார்க்‘ அமைக்க இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்றனர்.