என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டுவரி செலுத்த வந்த மூதாட்டியை படத்தில் காணலாம்.
அவினாசியில் தள்ளாத வயதிலும் வீட்டுவரி செலுத்த பேரூராட்சி அலுவலகம் வந்த மூதாட்டி
- வரி செலுத்தாதவர்களின் வீடு தேடி சென்று தீவிரமாக வசூல் செய்து வருகின்றனர்.
- அலுவலகத்திற்கு நேரில் வந்து வரி செலுத்திய மூதாட்டியை பலரும் பாராட்டினர்.
அவினாசி:
அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதற்கான வரியினங்களை நிர்வாகத்தினர் தீவிரமாக வசூலிப்பதற்காக அனைத்து வார்டு பகுதிகளிலும் மைக் மூலம் வரியினங்களை செலுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் வரி செலுத்தாதவர்களின் வீடு தேடி சென்று தீவிரமாக வசூல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவினாசி சீனிவாசபுரத்தை சேர்ந்த 91 வயதான ராஜாமணி என்ற மூதாட்டி நடக்க முடியாத நிலையிலும் கையில் கம்பு ஊன்றியபடி அவினாசி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து தனது வீட்டுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தி ரசீது பெற்று சென்றார். இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், அரசுக்கு செலுத்த வேண்டிய வரிபணத்தை அந்தந்த காலகெடுவுக்குள் கட்டுவது நமது கடமை. அதை கட்டாமல் இருந்தால் பெரும் குறையாக எனக்கு தோன்றும். வரித்தொகையை கட்டிமுடித்ததில் நான் திருப்தியடைந்தேன் என்று கூறி அங்கிருந்த அலுவலர்களை இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து புறப்பட்டு சென்றார். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் வரியினங்களை செலுத்த காலம் கடத்தும் நிலையில் நடை தளர்ந்த நிலையிலும், அலுவலகத்திற்கு நேரில் வந்து வரி செலுத்திய மூதாட்டியை பலரும் பாராட்டினர்.






