உடுமலை அமராவதி வனச்சரகங்களில் கிடப்பில் கிடக்கும் இயற்கை சூழல் சுற்றுலா திட்டம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

வனத்துறை சார்பில் சூழலியல் சுற்றுலா திட்டம் 2009ல் அறிமுகப்படுத்தப்பட்டது.வனத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டத்தில் மலைப்பகுதியை ஒட்டிய அமைந்துள்ள உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில், யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் உட்பட விலங்குகள், பறவையினங்கள், அரிய வகை மரங்கள், இருவாச்சி உள்ளிட்ட பறைவையினங்களும்,சிங்கவால் குரங்குகள், மலபார் அணில் ஆகியன வசிக்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும் வன விலங்குகளையும் நேரடியாக ரசிக்கவும் சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுற்றுலா மற்றும் வனத்துறை சார்பில் சூழலியல் சுற்றுலா திட்டம் 2009ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க செய்து வனத்தை மட்டுமே சார்ந்து வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைப்பதோடு வனம் குறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பிலும் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இயற்கை சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ், பல்வேறு மேம்பாட்டு பணிகள் இரு வனச்சரகங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. வனச்சரக பகுதிகளிலுள்ள 14 டிரக்கிங் செல்லும் பாதைகளில் 10-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன.மேலும் தமிழக கேரள மாநில எல்லையான சின்னாறு ஆற்றின் கரையில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் ஓய்வு விடுதிகளும், கோடந்தூர், புங்கன் ஓடை, மத்திகுத்து, கள்ளிமரத்துப்பட்டி, சக்கரைபாறை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் ஏற்படுத்தப்பட்டது.கூட்டாற்றில், மலைவாழ் மக்கள் இயக்கும் பரிசல் சவாரிக்கான பரிசல்கள் வாங்கப்பட்டு இடத்தேர்வும் செய்யப்பட்டது.

இவ்வாறு பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்ட போதும், இதுவரை இயற்கை சூழல் சுற்றுலா திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அதே நேரத்தில் சின்னாற்றின் மறுகரையில் உள்ள கேரள பகுதியில் இயற்கை சூழல் சுற்றுலா திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அங்கு சுற்றுலா செல்லும் பயணிகள் இரவு நேரம் தங்குதல், விலங்குகள் காணுலா, வனம் சார்ந்த பயிலரங்கம்,பழங்குடி கிராமத்துக்கு செல்லுதல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் பலரும் கேரள மாநில வனத்துறை மூலம் சின்னாறு ஈகோ டூரிசம் பகுதிகளுக்கு வார இறுதி நாட்களிலும், விடுமுறை தினங்களிலும் படையெடுத்து வரும் நிலையில்,தமிழக பகுதியில் உள்ள சின்னாறு வனத்துறை ஓய்வு விடுதிகள் பூட்டப்பட்டும், கூட்டாறு பழங்குடிகள் படகு சவாரி திட்டம் கண்டும் காணாமலும் விடப்பட்டுள்ளது.இதன் காரணமாக மலைவாழ் மக்களுக்கு கிடைக்கும் குறைந்த பட்ச மாற்று வருமானம் கூட கிடைப்பதில்லை.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னாறு மற்றும் மஞ்சம்பட்டி வனங்கள் குறித்து வனத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் கட்டமைப்பு வசதிகள் வீணாகும் நிலை உள்ளது.திட்டம் வாயிலாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மலைவாழ் மக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளை மட்டும் பார்வையிட்டு ஒரே நாளில் திரும்புகின்றனர். பலருக்கும் வனப்பகுதிக்கு செல்ல ஆர்வம் இருந்தும் வழிகாட்டுதல் இல்லாமல் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே உடுமலை அமராவதி வனச்சரகங்களில் இயற்கை சூழல் சுற்றுலா திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com