

உடுமலை:
உடுமலை பகுதிகளில் பகலில் வெயில் அபரிமிதமாக காணப்படும் நிலையில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகரித்து குளிர் சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.
இதனால் பலருக்கும் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்புகள் ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் நெரிசல் அதிகரிப்பதோடு பல மணி நேரம் காத்திருக்கும் சூழலும் ஏற்படுகிறது.
தற்போது கொரோனா தொற்று அச்சமும் நிலவி வருவதால் அனைவரும் ஒரே வரிசையில் நிற்பதால் சிக்கல் ஏற்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் என சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படும் நோய் பாதிப்பு மற்றும் பிற பாதிப்பு ஏற்பட்டு வருவோரை அடையாளம் காண்பதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.
எனவே அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு வருவோருக்கு தனி பிரிவு துவக்கமும், டாக்டர்கள், செவிலியர் மற்றும் மருந்துகள் வழங்க கூடுதல் பிரிவு துவக்க வேண்டும்.
அதே போல் கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.