

உடுமலை:
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நூலகத்தில் நடைபெற்ற ஓவியம், கட்டுரை, கதைசொல்லி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நூலகர் கணேசன் தலைமை வகித்தார்.
நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவக்குமார் வரவேற்று பேசினார். நூலகர் மகேந்திரன், பேராசிரியர் கண்டி முத்து, ஓவியர் உடுமலை ஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடுமலை காவல் ஆய்வாளர் (குற்றப்பிரிவு)எஸ்.வி. சுஜாதா சான்றிதழ்களை வழங்கி மாணவர்கள் நூலகத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், புத்தகங்களை வாசிப்பதால் ஏற்படும் நன்மை, வாசிப்பதால் ஏற்படும் உயர்வுகள் குறித்தும், புத்தகங்களை வாசிப்பதில் தன்னம்பிக்கை கிடைக்கும், மன வலிமை அடையும் என்றார்.
மேலும் தான் படித்த நூல்களை நினைவு கொண்டு பேசினார். மேலும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற நூலக உறுப்பினர் சகானாவிற்கு பாராட்டு தெரிவித்து நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக புதிய நூல்கள் கண்காட்சியை இன்ஸ்பெக்டர் சுஜாதா துவக்கி வைத்தார்.உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க செயலாளர் சக்தி குடும்பத்துடன் நூலக உறுப்பினராக இணைந்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் அஸ்ரப் சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்டத்தினர் செய்திருந்தனர். உடுமலை மகாத்மா காந்தி பள்ளி மாணவர்கள், பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், அரசு மகளிர் விடுதி மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.