உடுமலையில் ஆந்திர மாநில நாவல் பழங்கள் விற்பனை

சில்லறை விற்பனை விலையில் ஒரு கிலோ நாவல் பழங்கள் ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

குடிமங்கலம்:

நாவல் பழத்தின் முக்கியத்துவத்தை பல புராணக் கதைகள் சுட்டிக் காட்டியதாலோ என்னவோ நமது முன்னோர்கள் கிணற்று மேடு, குளக்கரை, கோவில்கள், சாலையோரம் என பல இடங்களிலும் நாவல் மரங்களை வளர்த்து வந்தார்கள். ஆனால் காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் கிராமப்புறங்களில் நாவல் மரங்களைக் காண்பது அரிதானதாக மாறிவிட்டது.

சமீப காலங்களாக நாவல் பழத்திலுள்ள சத்துக்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நாவல் பழத்துக்கு நல்ல விலை கிடைக்கத் தொடங்கியுள்ளதால் உடுமலையையடுத்த பொன்னாலம்மன் சோலை உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் விவசாயிகள் தனிப்பயிராக நாவல் மரங்களை சாகுபடி செய்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை அறுவடை செய்யப்படும் நாவல் பழங்கள் ஆடி மாதத்தில் அறுவடைக்குத் தயாராகி விடும். அதேநேரத்தில் ஆந்திர மாநிலத்தில் சித்திரை மாதத்திலேயே நாவல் பழ அறுவடை தொடங்கி விடும்.

ஆனால் நடப்பு ஆண்டில் சற்று தாமதமாக சீசன் தொடங்கியுள்ளதால் தற்போது வியாபாரிகள் அங்கிருந்து உடுமலை பகுதிக்கு நாவல் பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். வீரிய ஒட்டு ரக நாவல் பழங்கள் அளவில் பெரியதாகவும் சுவை மிகுந்ததாகவும் உள்ளதால் பொதுமக்கள் இதனை விரும்பி வாங்குகின்றனர். சில்லறை விற்பனை விலையில் ஒரு கிலோ நாவல் பழங்கள் ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com