

திருப்பூர்:
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடன் வழங்கும் முகாம் மற்றும் ஒப்பளிப்பு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் பூபதிராஜா, மகளிர் திட்ட இணை இயக்குனர் மதுமதி, நபார்டு வங்கி மேலாளர் ராஜீ உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.90 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கடன் ஒப்பளிப்பு ஆணை மற்றும் காசோலையை கலெக்டர் வழங்கினார். பிரதமரின் சுய வேலை வாய்ப்பு திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலமாக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
இதுபோல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் உலக மகளிர் தின விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்திய பாமா, மாவட்ட சமூகநல அதிகாரி அம்பிகா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அதிகாரி வாசுகி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி வாணி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை, பேரிடர் மேலாண்மை திட்ட இயக்குனர் அருணா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
மகளிர் தினத்தையொட்டி பெண் ஊழியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
சிறப்பு விருந்தினராக கூடுதல் கலெக்டர் (பயிற்சி) அட்லாப் ரசூல் பங்கேற்றார். கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் கலெக்டர் அலுவலக வராண்டாவில் மகளிர் தினத்தை போற்றும் வகையில் வர்ண கோலங்கள் வரைந்து இருந்தனர்.