search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர் சீரமைப்பு பணி தொடக்கம்
    X

    கோப்புபடம். 

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர் சீரமைப்பு பணி தொடக்கம்

    • விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
    • உடுமலை மாரியம்மன் கோவில் தேரை முறையாக பராமரித்து பாதுகாப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    உடுமலை:

    உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 4-ம் தேதி கம்பம் போடும் நிகழ்ச்சியும், நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய உற்சவர் ஊர்வல நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

    நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தேருக்கு பதிலாக இந்த ஆண்டு இலுப்பை மற்றும் தேக்கு மரத்தை கொண்டு புதிய தேர் செய்யப்பட்டது.அதில் அம்மன் தலங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள், விஷ்ணு, முருகர், விநாயகர் உள்ளிட்ட 220 மரசிற்பங்கள், 120 பொதியல் சிற்பங்கள் அடங்கிய எண்கோண வடிவில் புதிய பரிணாமத்தில் காட்சியளித்த தேர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 53 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் செய்யப்பட்ட இந்த தேரானது 12 அடி உயரத்தில் ஐந்து நிலைகளை கொண்டதாகவும் சுவாமிகள் எழுந்தருளும் சிம்மாசனம் 2 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் கண்குளிர தேரில் எழுந்தருளிய மாரியம்மன் சூலத்தேவரையும் தரிசனம் செய்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு விழாவும் நிறைவு பெற்றது.

    ஆனால் 15 நாட்கள் கடந்தும் தேரை பாதுகாப்பதற்கு உண்டான நடவடிக்கையை கோவில் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.இதனால் தேர் சேதமடையும் சூழலுக்கு தள்ளப்பட்டது.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில்,

    வரலாற்றை தாங்கி நின்ற நூறு ஆண்டுகள் கடந்த பழைய தேருக்கு பதிலாக இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதிய தேர் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.தேரோட்டம் நடைபெற்று முடிந்து இன்று வரையிலும் அதை முழுமையாக பாதுகாத்து பராமரிப்பதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் தேர் மழை,வெயில், காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிப்படையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. உடுமலையின் வரலாற்றையும் காவல் தெய்வமான அம்மனையும் சூலத்தேவரையும் தாங்கி நிற்கும் தேர் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது. எனவே உடுமலை மாரியம்மன் கோவில் தேரை முறையாக பராமரித்து பாதுகாப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.இதையடுத்து தேரை சீரமைக்கும் பணியை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

    Next Story
    ×