துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் மருத்துவர் அறிவுரை

செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.நோய் வராமல் இருக்க ஊட்டச்சத்து மிக அவசியமாக தேவைப்படுகிறது.
ஊட்டச்சத்து குறித்த  விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவர்கள்.
ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவர்கள்.
Published on

திருப்பூர் :

ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக ஊட்டச்சத்து உணவு பற்றிய பேரணி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக 15 வேலம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர் கலைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். நோய் வராமல் இருக்க நமது உடலில் ஊட்டச்சத்து மிக அவசியமாக தேவைப்படுகிறது. சத்தான உணவுகளான ,கீரைகள், காய்கறிகள் இவை அனைத்தும் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் தேவைப்படுகிறது. இவற்றில் அதிகளவில் முக்கிய சத்துக்கள் காணப்படுகிறது.வைட்டமின் -ஏகொண்ட முருங்கை, பப்பாளி போன்ற பழம், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். துரித உணவுகளை எவ்வளவு அதிகம் சாப்பிடுகிறோமோ அவ்வளவு அதிகம் கேடு விளைவிக்கும். சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அனைவரும் சத்தான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வத்தோடு வாழவேண்டும்.ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றார். இதைத்தொடர்ந்து மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், அரவிந்தன், பாலசுப்பிரமணியம், சுந்தரம் , பூபதி ராஜா, பாக்கியலஷ்மி ஆகியோர் தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு பேரணியில் கலந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1 ந் தேதி தொடங்கி தொடர்ந்து 7 நாட்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை நடத்த வேண்டும். அதன் படி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு- 2 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் காய்கறிகளின் அவசியத்தை எடுத்துக் கூறினார்கள்.தொடர்ந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் கண்காட்சியினை நடத்த திட்டமிட உள்ளார்கள் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com