என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் குவியும் அய்யப்ப பக்தர்கள் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை
- கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் கழிப்பிடங்கள் மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
- நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் , சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர்.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை மற்றும் பஞ்சலிங்க அருவி, அமண லிங்கேஸ்வரர் கோயிலுக்கு கடந்த கார்த்திகை மாதம் துவங்கியது முதல் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் பக்தர்கள் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்யும் முன் பஞ்சலிங்க அருவியில் குளிக்க செல்கின்றனர். ஒரு சிலர் கோவிலின் முன் ஓடும் பாலாற்றிலேயே குளித்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் கழிப்பிடங்கள் மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் பஞ்சலிங்க அருவி அருகில் குளித்துவிட்டு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அருவியின் அருகிலேயே குளியல் அறை கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக தற்காலிக அடிப்படையில் இந்த வசதியை செய்து தர வேண்டும் எனவும் பக்தர்கள் கருத்து தெரிவித்தனர் .
விடுமுறை மற்றும் அரசு விடுமுறை தினங்களில் திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் , சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர். அதனை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளான கழிப்பிடம், உடைமாற்றும் அறை, குடிநீர் வசதி, உணவருந்தும் கூடம் ஆகியவற்றை அமைத்து தர சுற்றுலாத் துறை நிர்வாகம் முலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






