search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய்ப்பால் வார விழாவையொட்டி விழிப்புணர்வு கண்காட்சி - பேரணி

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் போஷன் அபியான் திட்டத்தின் சார்பாக தாய்பால் வார விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் கீழ் போஷன் அபியான் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதாகும். குழந்தையின் முதல் 1000 நாட்கள் அதாவது தாயின் வயிற்றில் கரு உருவானது முதல் இரண்டு வயது வரையிலான நாட்களே அந்த குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கிறது. முதல் 1000 நாட்களில் குழந்தையின் முக்கிய உணவு தாய்ப்பால்,குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அளிக்க வேண்டிய அவசியம் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை இத்திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தாய்ப்பாலூட்டலை சாத்திய மாக்குவோம்,பணிபுரியும் தாயின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம் என்ற தலைப்பின் கீழ் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்பாலின்முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் போஷன் அபியான் சார்பாக கண்காட்சி அரங்குகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இக்கண்காட்சியில் பாலூட்டும் தாய்மார்கள் உண்ண வேண்டிய உணவுகள்,தாய்மார்கள் பாலூட்டும் முறை பற்றிய விளக்கக்காட்சி, தாய்ப்பாலின் நன்மைகள்,தானிய கலசம், உணவு பிரமிடு, கீரை வகைகள், ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சி திட்டப்பணிகளால் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு, சத்துமாவினால் செய்யக்கூடிய உணவுகள், சத்துமாவு கேக், சத்துமாவு உள்ளடக்கிய பொருட்கள், இரும்புச்சத்து தேர், கால்சியம் வீடு, வளர்ச்சிப்படிகள்,காய்கறிகளால் செதுக்கப்பட்ட வடிவங்கள், முதல் 1000நாட்களின் முக்கியத்துவம் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.

    இதனை அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் போஷன் அபியான் ஜன் அந்தோலன் கீழ் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான சமையல் போட்டி மற்றும் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தலுக்கான போட்டி அனைத்து வட்டாரங்களிலும் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாரட்டுச்சான்றிதழ்கள் வழங்ப்பட்டது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    முன்னதாக உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி தாய்ப்பாலூட்டலை சாத்தியமாக்குவோம், பணிபுரியும் தாயின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம் என்ற தலைப்பில் அங்கன்வாடி பணியாளர்களது பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட திட்ட அலுவலர் ஸ்டெல்லா மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×