திருமுருகன்பூண்டி புதிய கமிஷனராக ஆண்டவன் பொறுப்பேற்பு

நிரந்தர கமிஷனர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அப்துல்ஹாரீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பின் நகராட்சி கூட்டங்களில் பிரச்சினை, கூச்சல், குழப்பம் நிலவி வந்தது.
திருமுருகன்பூண்டி கமிஷனராக ஆண்டவன் பொறுப்பேற்றுக் கொண்ட காட்சி.
திருமுருகன்பூண்டி கமிஷனராக ஆண்டவன் பொறுப்பேற்றுக் கொண்ட காட்சி.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி கடந்த 2021-ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து நகராட்சி கமிஷனராக முகமது சம்சுதீன் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவருடைய செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு திருப்தி அளிக்காததால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து அவர் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு, பவானி கமிஷனராக இருந்த தாமரை திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருசில நாட்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில், மருத்துவ விடுப்பில் சென்றார். இதையடுத்து காங்கயம் நகராட்சி பொறுப்பு கமிஷனராக இருந்த பன்னீர்செல்வமும், அதைத்தொடர்ந்து வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மோகன்குமாரும் திருமுருகன்பூண்டிக்கு பொறுப்பு கமிஷனராக பணியாற்றினர். வாரத்தில் ஒருசில நாட்கள் மட்டுமே அவர்கள் வந்து சென்றதால் அலுவல் பணிகள் தடைபட்டது.

இதையடுத்து நிரந்தர கமிஷனர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அப்துல்ஹாரீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார். ஆனால் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து நகராட்சி கூட்டங்களில் பிரச்சினை, கூச்சல், குழப்பம் நிலவி வந்தது. இதனால் கவுன்சிலர்களும், பொதுமக்களும் கடும் அதிருப்திக்குள்ளாகினார்கள். இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் ஹாரீஸ் சிவகங்கை மாவட்டத்திற்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக திட்டக்குடி நகராட்சி கமிஷனர் ஆண்டவன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனராக ஆண்டவன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் குமார் தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com