search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகரில் அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும் - மேயர் பேட்டி
    X

    திருப்பூர் மாநகரில் சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    திருப்பூர் மாநகரில் அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும் - மேயர் பேட்டி

    • திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் அமைத்தல், தார்சாலை அமைக்கும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.

    பல்வேறு சாலைகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களும், கவுன்சிலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தலைமையில், 60 வார்டுகளிலும் சாலைப்பணிகளை சீரமைப்பது மற்றும் குழிகளை மூட நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதன் தொடர்ச்சியாக மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ள நிலையில், தலா ஒவ்வொரு மண்டலத்திற்கும் 8 பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிப்பர், ஒரு ரோலர் மற்றும் 16 பணியாளர்கள் என 32 பொக்லைன் எந்திரம் மற்றும் 64 பணியாளர்கள் மூலம் மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் 4 மண்டல அலுவலகங்களிலும் தொடங்கி வைத்தார். இதில் மண்டல தலைவர்கள் உமா மகேஷ்வரி, கோவிந்தராஜ், கோவிந்தசாமி, இல.பத்மநாபன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    பின்னர் மேயர் தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநகராட்சி பகுதிகளில் நடந்து வருகிற பல்வேறு பணிகளின் காரணமாக சாலைகள் சேதமடைந்து மக்கள் பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில், பழுதடைந்த மற்றும் சேதமடைந்த சாலைகளைசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் பணிகள் மேற்கொள்ளும் வகையில் பொக்லைன் எந்திரங்கள் வழங்கப்பட்டும், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பணி மேற்கொள்வார்கள். உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகளை முடிப்பதற்கு என காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. விரைவில் அனைத்து சாலைகளும் செப்பனிடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். பாதாள சாக்கடை திட்டம், 4-வது குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×