பொள்ளாச்சி- உடுமலை சாலையில் வாகனங்களை இடையூறாக நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

உடுமலை நெடுஞ்சாலை சாலை போக்குவரத்திற்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. சாலையை ஆக்கிரமிப்பு செய்து கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.
சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை படத்தில் காணலாம்.
சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை படத்தில் காணலாம்.
Published on

உடுமலை :

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் பொள்ளாச்சி- உடுமலை நெடுஞ்சாலை சாலை போக்குவரத்திற்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த சாலையின் இரண்டு புறங்களிலும் பல்வேறு தரப்பட்ட கடைகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் இயங்கி வருகிறது.

ஒருவழிப்பாதையான இந்த சாலையின் வழியாக கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, கேரளா, திருமூர்த்தி மலை, அமராவதி, மூணாறு மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு வாகனங்கள் செல்கின்றது. இதனால் பொள்ளாச்சி- உடுமலை சாலை எப்போதும் பரபரப்பும் வாகன நெருக்கமும் நிறைந்தே காணப்படும். இந்த சூழலில் சாலையில் ஓரத்தில் அமைந்துள்ள கடைகளுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: - பரபரப்பு நிறைந்த உடுமலை- பொள்ளாச்சி சாலையை பகுதி அளவுக்கு கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் ஆக்கிரமித்து வருகிறது. இந்த சாலையின் இரண்டு புறங்களிலும் அமைந்துள்ள கடைகளுக்கு வருகின்ற பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். பார்க்கிங் வசதி செய்யப்படாமல் வணிக வளாகங்கள் கட்டப்பட்டதே அதற்கு காரணமாகும். கட்டிட கட்டுமான பணிகளின் போது நகராட்சி நிர்வாகம் உரிய முறையில் ஆய்வு செய்து இருந்தால் அதன் உரிமையாளர்கள் பார்க்கிங் வசதியுடன் கட்டிடங்களை கட்டி இருப்பார்கள். அனுமதி பெறுவதற்கு வரும் போதாவது அதிகாரிகள் ஆய்வு செய்திருக்க வேண்டும். அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். அது மட்டுமின்றி நோயாளிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்படும் சூழலும் உள்ளது.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கும் அதிகாரிகள் முன்வருவதில்லை.எனவே பொள்ளாச்சி- உடுமலை சாலையில் போலீசார் ரோந்து சென்று வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டும் இன்றி சாலையின் இரு புறங்களிலும் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்துமாறு அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com