ரூ.100 கோடி மோசடி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் - பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை

சொத்து பத்திரங்களை வாங்கி வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி, பிரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நபர்கள் மோசடி நபர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தரக்கோரி மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது :- எங்களிடம் பல்லடத்தை சேர்ந்த சிவகுமார், அவரது அண்ணன் விஜயகுமார் மற்றும் விஜயகுமார் மகன் ராகுல் பாலாஜி மற்றும் பிரவினா உள்ளிட்டோர் எங்களுக்கு கடன் வாங்கி தருவதாகவும், தொழிலில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாகவும் கூறி, எங்களது சொத்து பத்திரங்களை வாங்கி வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பணத்தை இழந்து அவதிப்பட்டு வருகிறோம். இந்த மோசடியால் எங்களது குடும்பங்கள் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.

இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து ஒரு மாதத்திற்கு பின்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு பல்லடம் நீதிமன்றம் ஒரு மாதத்திற்கு முன் பிடிவாரண்ட் பிறப்பித்தும் போலீசார் அவர்களை கைது செய்ய தாமதப்படுத்துகின்றனர். மோசடி கும்பல் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் போலீசார் தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்யாமல் உள்ளனர். இதனால் மோசடி கும்பலுக்கு போலீசார் துணை போவதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த மோசடி வழக்கினை சிபிஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com