ரூ.15 லட்சம் குட்கா, 2 கார் பறிமுதல்

இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும் பூட்டு உடைத்து ஆய்வு மேற்கொண்டனர்
பறிமுதல் குட்கா, கார் படத்தில் காணலாம்
பறிமுதல் குட்கா, கார் படத்தில் காணலாம்
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு, நாட்டறம்பள்ளி பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது ஆத்தூர்குப்பம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் பூட்டி இருந்த குடோனை, பூட்டு உடைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் தடை செய்யப்பட்ட சுமார் 1 டன் எடை கொண்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஆத்தூர்குப்பம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோனை, கேத்தாண்டப்பட்டியை சேர்ந்த ராஜூ என்கிற பூவரசன் ( வயது 30) மற்றும் அவரது தம்பி பொன்னரசன் ( 25) ஆகியோர் வாடகை எடுத்து குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பொன்னரசனை கைது செய்த போலீசார், அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து நாட்டியம் பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பூவரசனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com