தொடர் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது

75 பவுன் நகை, 20 பைக்குகள் பறிமுதல் போலீசார் விசாரணை
தொடர் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவரது வீட்டின் அருகே நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 7-ந் தேதி இரவு நகைக்கடை உள்ள பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு பூட்டினர். பின்னர் சரவணனின் நகை கடை பூட்டை விடுத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர்.

தொடர் திருட்டு

நூதன முறையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் சம்பந்தமாக ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

நேற்று ஆம்பூர் தாலுகா போலீசார் வெங்கிலி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த 3 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சரவணன் கடையில் புகுந்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றதும் மேலும் அவர்கள் ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து ஆம்பூர் பெரியாங்குப்பம் கம்பர் தெருவை சேர்ந்த திவாகர் (24), கம்பி கொல்லையைச் சேர்ந்த கருணாகரன் (25), சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்த சுரேஷ் (23) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட ஆம்பூர் பெத்தலகேம் 8-வது தெருவை சேர்ந்த மெல்வின் (26), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் (21) ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வர்களிடம் இருந்து 75 பவுன் நகை, 9 கிலோ வெள்ளி பொருட்கள், 20 பைக்குகள் மற்றும் 10 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com