

நெல்லை:
அரசு பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற் காகவும், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படியும், பள்ளி மேலாண்மை குழு ஏற்படுத்தப்பட்டது.
அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங் கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் வளர்ச்சியில் இந்த குழு முக்கிய பங்கு வகிக்கிறது.
பள்ளி மேலாண்மை குழுவை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுகட்டமைப்பு செய்வது அவசியம். அதன்படி அனைத்து அரசு பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
அதன்படி இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக பள்ளி கல்வித்துறை வரலாற்றில் ஒரேநாளில் 37,391 பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
நெல்லை மாவட்டத்திலும் அனைத்து அரசு பள்ளி களிலும் இன்று மேலாண்மை கூட்டம் நடைபெற்றது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 340 தொடக்க பள்ளி, 50 நடுநிலைப்பள்ளி, 92 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் உள்ள 482 அரசு பள்ளிகளிலும் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் தலைமையில் மாணவர்களின் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். டவுன் கல்லணை பெண்கள் மாநகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவராஜ், கவுன்சிலர்கள் உலகநாதன், அனார்கலி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரோலஸ் பாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் நாச்சியார் வரவேற்றார்.
கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன? இதன் பணிகள் என்ன? இதன் அடிப்படை நோக்கம் என்ன? என்பது குறித்து பெற்றோர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி எடுத்துரைத்தார்.
மேலும் பள்ளியின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், வளர்ச்சி திட்டங்களை தயாரிக்கவும், அரசு பள்ளிகளில் மாணவர் கள் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை திட்டமிடல் உள்ளிட்ட பணிகளை மேலாண்மை குழு மேற்கொள்வதாக தெரிவித்தார். முடிவில் உதவி தலைமையாசிரியை மலர்விழி நன்றி கூறினார்.
இதேபோல் கருங்குளம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா தலைமை தாங்கினார். இதில் 48-வது வார்டு கவுன்சிலர் ஆமினா பீவி, தலைமை ஆசிரியர் இசக்கித்தாய், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில செயலாளர் ஆசாத் பாதுஷா, பெரோஸ்கான், ஷேக் உஸ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.