

களக்காடு:
களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி தினசரி காலையில் சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடந்து வருகிறது.
திருவிழாவின் 5-ம் நாளன்று கருட சேவை விழா நடந்தது. 7-ம் திருநாளான 12-ந் தேதி மாலை திருக்கல்யாண வைபவம் இடம்பெற்றது. 8-ம் நாளான நேற்று பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
இதனை முன்னிட்டு பகலில் வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் இரவில் வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை விழா மண்டகப்படி தாரர்களான நாடார் சமுதாயத்தினர் செய்திருந்தனர். 10-ம் நாளான நாளை 15-ந் தேதி மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.