திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களிடம் அத்துமீறும் போதை கும்பல்

உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் மது அருந்துவது முகம் சுளிக்க வைக்கிறது
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களிடம் அத்துமீறும் போதை கும்பல்
Published on

வேங்கிகால்:

திருவண்ணாமலையில் பவுர்ணமி தினங்களில் கிரிவலம் வரும் பக்தர்களை குறிவைத்து போதை கும்பல் பணம் பறிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. காவி உடை, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு சுண்ணாம்பு கட்டிகளை தூளாக்கி தட்டில் வைத்து கிரிவலம் வரும் பக்தர்களின் நெற்றியில் பூசி தட்டில் பணம் போடும் படி வற்புறுத்துகின்றனர்.

இதில் பெண் பக்தர்களின் நெற்றி மற்றும் கழுத்து பகுதியில் இவர்கள் விபூதி போன்ற பொருட்களை திடீரென வழிமறித்து பூசுவதால் பெண்கள் பதறியவாறு விலகி செல்கின்றனர். இந்த போதை கும்பல் பல லட்சம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் நடந்து செல்லும் பாதையில் அமர்ந்து கொண்டு மது அருந்துவது அந்த வழியாக செல்லும் பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் அத்துமீறலின் உச்சமாக உள்ளது.

சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் சாமியார்கள் என்ற போர்வையில் பக்தியுடன் கிரிவலம் வலம் பக்தர்களிடம் அத்துமீறி நூதன முறையில் பணம் பறிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த போதை கும்பலுக்கு இடையில் ஏற்படும் சண்டையால் ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கம்புகளால் தாக்கிக்கொள்ளும் சம்பவம் கிரிவலம் செல்லும் பக்தர்களை பதட்டமடைய செய்கிறது.

ஆன்மீக போர்வையில் பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போதை கும்பல்களால் கிரிவல பக்தர்களுக்கு ஏதேனும் விபரீதம் நிகழ்வதற்குள் காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com