search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம் அருகே பெண் மீது முட்டை வீசி நகை பறித்த கொள்ளையர்கள்
    X

    தாம்பரம் அருகே பெண் மீது முட்டை வீசி நகை பறித்த கொள்ளையர்கள்

    • நடைபயிற்சி சென்ற பெண் மீது கொள்ளையர்கள் முட்டையை வீசி நகை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொள்ளையர்கள் இருவரும் கவிதா அணிந்து இருந்த 6 பவுன் நகையை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    தாம்பரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பு, பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நடைபயிற்சி சென்ற பெண் மீது கொள்ளையர்கள் முட்டையை வீசி நகை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் கவிதா (58). இவர் அருகே உள்ள கருமாரியம்மன் கோவில் தெரு சாலையில் நடைபயிற்சி செய்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென கவிதா மீது முட்டையை வீசினர்.

    இதில் முட்டை உடைந்து வழிந்தது. இதனால் கவிதா நிலை தடுமாறினார். அதற்குள் கொள்ளையர்கள் இருவரும் கவிதா அணிந்து இருந்த 6 பவுன் நகையை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது நகை பறிப்பதற்கு முன்பு மர்ம வாலிபர்கள் 2 பேரும் அதே பகுதியில் 2 முறை சுற்றி வந்து ஆட்கள் நடமாட்டம் குறித்து நோட்டமிட்டு சென்று இருப்பது பதிவாகி உள்ளது. இதனை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×