இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த தனியார் நிறுவன மேலாளர் கைது

கைப்பையில் இருந்த செல்போனை ஒரு வாலிபர் பறித்து கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.
இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த தனியார் நிறுவன மேலாளர் கைது
Published on

கோவை,

மேட்டுப்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் யாமினி (வயது22). இவர் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று யாமினி அரசு பஸ்சில் காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரின் கைப்பையில் இருந்த செல்போனை ஒரு வாலிபர் பறித்து கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த யாமினி சத்தம் போட்டார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், இளம்பெண்ணிடம் செல்போன் பறித்தது கோவை செல்வபுரம் ரங்கசாமி காலனியை சேர்ந்த ஸ்டாலின் (30) என்பதும், இவர் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சீரநாயாக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்தவர் அஜித் (வயது26), பெயிண்டர். சம்பவத்தன்று இவர் பி.என்.புதூர் புதுக்கிணறு வீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர்கள் 4 பேர் அஜித்திடம் பணம் கடனாக கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி அஜித்தை அடித்து உதைத்தனர்.

மேலும் பீர்பாட்டிலால் அவரை தாக்கினர். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சண்டையை விலக்கி விட முயன்றனர். ஆனால், 4 பேர் கும்பல் அவர்களையும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்கள் காயமடைந்த அஜித்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அஜித்தை தாக்கியது கோவை வீரகேரளம் சிறுவாணி ரோட்டை சேர்ந்த பீடி ரமேஷ் (31), எஸ்.எஸ். பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (27), சீரநாயக்கன்பாளையம் ராஜன் காலனியை சேர்ந்த குட்டிகுரா என்ற சரவணன் (31) மற்றும் பி.என். புதூர் ஜீவா நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் படையப்பா (24) என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com