தஞ்சையில் சுதர்சன சபா வளாக கடைகள் இன்று இடித்து அகற்றம்

தஞ்சையில் சுதர்சன சபா வளாக கடைகள் இன்று இடித்து மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.
பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்படுவதை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ஆணையர் சரவணக்குமார், போலீஸ் சூப்பிரண்டு
பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்படுவதை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ஆணையர் சரவணக்குமார், போலீஸ் சூப்பிரண்டு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா உள்ளது. 40 ஆயிரத்து 793 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த சபா, கடந்த 1927-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி திறக்கப்பட்டது.

இந்த சபா ஆண்டு வாடகை அடிப்படையில் 99 ஆண்டுகள் குத்தகைக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. தி.மு.க. பிரமுகர் ஒருவர், இந்த சபாவை குத்தகைக்கு எடுத்து இருந்தார்.ஒரு காலத்தில் நாடகம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக இருந்தது.

ஆனால் காலப்போக்கில் இந்த சபாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறைந்தது. மேலும் சபா வளாகத்தில் குத்தகை விதிமுறையை மீறி மதுபான கூடம், பேக்கரி கடை, செல்போன் கடை, உணவகம் ஆகியவை கட்டப்பட்டு, உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இதன் மூலம் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

நகர ஊரமைப்பு சட்டம் 1971 விதிகளின்படி உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டு உள்வாடகைக்கு விடப்பட்டிருந்த உணவகம், மதுபான கூடம், பேக்கரி, செல்போன் கடை ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூட்டி ‘சீல்’ வைத்தனர். இந்த மாதம் தொடக்கத்தில் குத்தகை விதிமுறைகளை மீறி செயல்பட்ட தி.மு.க. பிரமுகர் வசம் இருந்த சுதர்சன சபாவை தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம் 1975-ன் படி மாநகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

மாநகராட்சி அதிகாரிகளால் கையகப் படுத்தப்பட்ட சுதர்சன சபாவின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் மாநகராட்சிக்கு குத்தகை நிலுவை தொகை ரூ.20 கோடி வரை பாக்கி செலுத்த வேண்டியிருந்ததும் தெரிய வந்தது.  இந்த நிலையில் சுதர்சன சபா வளாகத்தில் இருந்த கடைகளை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.

 அதன்படி இன்று காலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சுதர்சன சபா பகுதிக்கு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து சுதர்சன சபாவில் இருந்த மதுபான கூடம் ,உணவகம், செல்போன் கடை , பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.  

பழைய பஸ் நிலையம் முன்பு ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளதால் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் போது பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசார் அவர்களை பணி நடைபெறும் இடத்தின் அருகே அனுமதிக்கவில்லை. 

தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ரூ.100 கோடி மதிப்பிலான இடம் மீட்கப்பட்டதுடன் ஆக்கிரமிப்பும் அகற்றப் பட்டதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்படுமா?

சுதர்சன் சபா வளாகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டதால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட பழைய பஸ் நிலையம் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது:-

சீரமைக்கப்பட்ட பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் நின்று செல்ல போதிய இட வசதி கிடையாது. மேலும் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்படவில்லை. தற்போது சுதர்சன சபா கட்டிடம் இடித்து அகற்றப்பட்டதால் பல ஆயிரம் சதுர அடி இடம் கிடைத்துள்ளது. 

எனவே இட நெருக்கடியை குறைக்கும் வகையிலும் பஸ்கள் கூடுதலாக நின்று செல்லும் வகையிலும் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். அங்கு பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கைகள் அமைக்க வேண்டும். இதேபோல் அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில்  சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com