

தஞ்சாவூர்:
தஞ்சையை சேர்ந்த ஒரு பெண்ணின் செல்போன் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்தே ஆன்லைன் வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த நம்பரை அந்தப் பெண் தனது தாயாரின் செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
எதிர்முனையில் பேசிய நபர் ஆன்லைன் வேலையில் உங்களுக்கு ஒரு டாஸ்க் கொடுப்போம். அதனை நீங்கள் சரியாக செய்து முடிக்க வேண்டும். அப்படி செய்தால் உங்களது வங்கிக் கணக்கில் நாங்கள் பணம் செலுத்திக் கொண்டே இருப்போம். இதற்காக குறிப்பிடும் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என கூறி அந்த மர்ம நபர் இணைப்பைத் துண்டித்தார்.
இதனை உண்மை என்று நம்பிய அந்தப் பெண் பல தவணைகளாக அந்த வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 530 செலுத்தியுள்ளார். சில நாட்கள் அந்தப் பெண் குறிப்பிட்ட மொபைல் செயலியில் வேலை செய்து கொண்டிருந்த. ஆனால் நாளடைவில் அந்த மொபைல் செயலி இயங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.
இது குறித்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.