குடிபோதையில் தகராறு: மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து கணவரும் தற்கொலை

இவர்களுக்கு கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. குடிபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
குடிபோதையில் தகராறு: மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து கணவரும் தற்கொலை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வேப்பன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 34). லாரி டிரைவர். இவரது மனைவி மோகனசுந்தரி (27).

இவர்களுக்கு கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கணவன்- மனைவி இருவரும் தஞ்சை மாரியம்மன்கோவில் காமாட்சியம்மன் நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சரத்குமார் தனது மாமியார் வீடான திருவாரூர் மாவட்டம் நெப்புகோவில் பகுதிக்கு மனைவியுடன் சென்று ஒரு வாரம் தங்கினார். விருந்து முடிந்த பின்னர் இருவரும் தஞ்சையில் உள்ள வீட்டிற்கு வந்து விட்டனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் சரத்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மோகனசுந்தரி தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அன்றைய தினம் இரவில் இருவரும் வீட்டில் தூங்கினர்.

இந்த நிலையில் மனவேதனையில் இருந்த மோகனசுந்தரி நேற்று மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்த சரத்குமார் மோகனசுந்தரி பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார். பின்னர் சரத்குமாரும் அதே சேலையில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரத்குமார், மோகனசுந்தரி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றறை ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com