குன்னூரில் தேயிலை விவசாயிகள் உண்ணாவிரதம்

20-ம் நாளாக போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது 6 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
குன்னூரில் தேயிலை விவசாயிகள் உண்ணாவிரதம்
Published on

அருவங்காடு,

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு விலை வேண்டி கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் நாக்கு பெட்டா படுகர் நலசங்கம் சார்பில் கடந்த 19 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. அவர்களின் போராட்டம் 20-ம் நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தேயிலை விவசாயிகளின் போராட்டம் தற்போது மாவட்ட அளவில் பரவி வருகிறது. இதன் ஒருபகுதியாக குன்னூர் தாலுக்காவில் படுகர் இன மக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை ஆரூர் தலைவர் குமார் தலைமைதாங்கி தொடங்கி வைத்தார்.

மேற்கு நாடு சீமை நல சங்கம், நாக்கு பெட்டா சங்கம், நெலிகோலு அறக்கட்டளை உள்ளிட்ட சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் ராமன், தருமன்னன்,கேத்தி 14 ஊர் தலைவர் ரமேஷ், தேனலை ஊர் தலைவர் போஜன், கொதங்கட்டி சங்க செயலாளர் குமார், சோகத்தொரை ஊர் தலைவர் மகாலிங்கம், சக்கலட்டி ஊர் தலைவர் ராஜு, ஒடையரட்டி ஊர் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் அர்ஜுனன், தொட்டணி ஊர் தலைவர் நாகராஜ் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

குன்னூர் உண்ணாவிரத போராட்டத்தில் கேத்தொரை, ஒடையரட்டி, சோகத்தொரை, தேனலை, தொட்டனி, சக்கலட்டி உள்ளடக்கிய 6 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உள்ளனர். மேலும் அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து பதாகைகளை கையில் ஏந்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை ஊட்டி, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது குன்னூர் பகுதிகளுக்கு பரவியது அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com