இளைஞா்களிடம் தமிழ் எழுத்தின் வரலாற்றை எடுத்து சொல்ல வேண்டும் - மக்கள் சிந்தனை பேரவை தலைவா் பேச்சு

தானும் வளர வேண்டும், நாடும் மக்களும் வளர வேண்டும் என்ற பொதுவான சிந்தனையுடன் வரவேண்டும்.அடுத்த தலைமுறை இளைஞா்களிடம் தமிழ் எழுத்தின் வரலாற்றை எடுத்து சொல்ல வேண்டும்.
இளைஞா்களிடம் தமிழ் எழுத்தின் வரலாற்றை எடுத்து  சொல்ல வேண்டும் - மக்கள் சிந்தனை  பேரவை தலைவா் பேச்சு
Published on

திருப்பூர்:

திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் ஆகியன சாா்பில் 19-வது திருப்பூா் புத்தகத் திருவிழா வேலன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

விழாவின் 6 -வது நாளன்று சிந்தனை அரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இதில் 'எழுதுகோல் தெய்வம்... எழுத்தும் தெய்வம்' என்ற தலைப்பில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:-

புத்தகங்களை வாசிப்பதன் மூலமாக வளரும் தன்னம்பிக்கை தனியாக இருக்க முடியாது. அது நாட்டுப்பற்றுடனும், சமுதாயச் சிந்தனையுடன் இணைந்துதான் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை என்பது தனி மனிதவளா்ச்சி மட்டுமானதல்ல. தானும் வளர வேண்டும், நாடும் மக்களும் வளர வேண்டும் என்ற பொதுவான சிந்தனையுடன் வரவேண்டும்.

ஒரு மாணவனிடம் சரியான முறையில் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தினால் அடுத்தத் தலைமுறை வாசிப்பதற்கும், அதன் பின்னா் யோசிப்பதற்கும் தயாராக உள்ளது. அதைத் தயாா்படுத்த வேண்டிய நல்ல நம்பிக்கை நமக்கு வரவேண்டும். கட்சி, ஜாதி, மதங்கள் அனைத்தும் வேண்டாம் என்று அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் எவராக இருந்தாலும் பாராட்டும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும். பேரறிஞா்கள் சொன்னதுபோல நாம் மற்ற மொழிகளின் குறைபாடுகளை, கீழ்மையை, விமா்சனத்தை அதிகமாகப் பேசுகிறோம். இதைவிடுத்து நம் மொழியின் சிறப்பைப் பேச வேண்டும். பேசுவது மட்டுமல்லாமல் நிலைநிறுத்தும் வகையில் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும். பிற மொழிகளைப் பற்றிக் குறை சொல்வது நமது நோக்கமாகக்கூடாது. இன்றைய காலகட்டத்தில் அடுத்த தலைமுறை இளைஞா்களிடம் தமிழ் எழுத்தின் வரலாற்றை எடுத்து சொல்ல வேண்டும் என்றாா்.

முன்னதாக எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன் 'சூழலியல்' என்ற தலைப்பில் பேசினாா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com