search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளுக்கு தொல்லை கொடுப்பதாக பெற்றோர் புகார்- போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை
    X

    மகளுக்கு தொல்லை கொடுப்பதாக பெற்றோர் புகார்- போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை

    • போலீசாரின் விசாரணைக்கு பயந்து வாலிபர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையத்தை சேர்ந்தவர் சுஜித்குமார் (வயது 30).

    இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டையிங் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஜித்குமாருக்கு தோலம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் நேரில் பார்த்து கொள்ளாமல் செல்போன் மூலம் பேசி பழகி வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். மேலும் வாலிபருடன் பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறினர்.

    இதனையடுத்து இளம்பெண் தனது காதலனுடன் பேசுவதை தவிர்த்தார். ஆனால் சுஜித்குமார் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். இளம்பெண் போனை எடுக்கவில்லை.

    இந்தநிலையில் இளம்பெண்ணின் பெற்றோர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி செல்போன் மூலமாக தங்களது மகளுக்கு வாலிபர் தொல்லை கொடுப்பதாக மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். புகாரையடுத்து சுஜித்குமாரை தொடர்பு கொண்ட போலீசார் விசாரணைக்கு நேரில் வருமாறு அழைத்தனர்.

    இதனையடுத்து அவர் கடந்த 3-ந் தேதி பெங்களூரில் இருந்து தனது வீட்டிற்கு வந்தார். போலீசாரின் விசாரணைக்கு பயந்து அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுஜித்குமார் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுஜித்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×