search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமங்கலம் அருகே முன்விரோதத்தில் மாட்டுப்பண்ணையில் வாலிபர் அடித்துக்கொலை
    X

    திருமங்கலம் அருகே முன்விரோதத்தில் மாட்டுப்பண்ணையில் வாலிபர் அடித்துக்கொலை

    • புகாரின் பேரில் போலீசார் கள்ளிக்குடி-சிவரக்கோட்டை பகுதியில் பல இடங்களில் தேடினர்.
    • கொலை சம்பவத்தில் மாட்டுப்பண்ணை உரிமையாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என மாரிச்சாமி உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. மகன் மாரிச்சாமி (வயது 34). இவரது மனைவி பாக்கியலட்சுமி (28). இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    கள்ளிக்குடி அருகேயுள்ள அகத்தாபட்டியை சேர்ந்த பாலுசாமி என்பவர் சிவரக்கோட்டையில் மாட்டுப் பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் கார் டிரைவராக மாரிச்சாமி வேலை பார்த்து வந்தார். இதன் காரணமாக காரியாபட்டியிலிருந்து தனது வீட்டினை சிவரக்கோட்டை சூர்யா நகருக்கு மாற்றி குடும்பத்துடன் தற்போது குடியிருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாரிச்சாமி மாட்டுப்பண்ணைக்கு வேலைக்காக புறப்பட்டு சென்றார். வழக்கமாக இரவு 8 மணிக்கு வீடு திரும்பிவிடுவார். ஆனால் நள்ளிரவு 12 மணி வரையிலும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது மனைவி பாக்கியலட்சுமி மாரிச்சாமியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.

    ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து மாரிச்சாமியின் மனைவி கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் கணவர் மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் கள்ளிக்குடி-சிவரக்கோட்டை பகுதியில் பல இடங்களில் தேடினர்.

    பின்னர் சந்தேகமடைந்து அவர் வேலை பார்த்து வந்த மாட்டுப்பண்ணையில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த இரவு நேர காவலாளி, இந்த பண்ணையில் பால்கறவை செய்யும் ஆறுமுகம் மூன்று வாலிபர்களுடன் வந்து சென்றதாக தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பண்ணையில் உள்ளே சென்று தேடிபார்த்த போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மாரிச்சாமி பிணமாக மிதந்தார்.

    போலீசார் அவரது உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பிணமாக கிடந்த மாரிச்சாமியின் நெற்றியில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த கள்ளிக்குடி போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.

    அதில் கள்ளிக்குடி அருகேயுள்ள வில்லூரினை சேர்ந்த ஆறுமுகம் இதே பண்ணையில் பால் கறவை செய்யும் தொழில் செய்து வருகிறார் என்பதும், அவருக்கும் மாரிச்சாமிக்குக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் தெரிந்தது.

    அதனால் ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் வந்து மாரிச்சாமியை அடித்து கொலை செய்து விட்டு, அதனை மறைக்க தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ஆறுமுகம் மற்றும் அவரது கூட்டாளிகளை கள்ளிக்குடி போலீசார் தேடிவருகின்றனர். மாட்டுப்பண்ணையில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே இந்த கொலை சம்பவத்தில் மாட்டுப்பண்ணை உரிமையாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என மாரிச்சாமி உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×