

நெல்லை:
நெல்லை அருகே உள்ள மானூர் ரஸ்தாவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 25). இவர் சம்பவத்தன்று நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது தனது மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுதொடர்பாக அவர் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வாலிபர் மாயாண்டி மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது.
இந்நிலையில் மாயாண்டி தனது செல்போனை பார்த்த போது அதில் ஒரு 'வாட்ஸ்-அப்' குரூப்பில் அவரது மோட்டார் சைக்கிளின் படத்தை பதிவிட்டு விற்பனைக்கு என கூறப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அந்த எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்திய போது மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தூத்துக்குடி மாவட்டம் அகரத்தை சேர்ந்த சிதம்பரம் சிவா (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.