அன்னவாசல் அருகே மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் திடீர் மறியல்

பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அன்னவாசல் அருகே மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் திடீர் மறியல்
Published on

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அன்னவாசல் அருகே குமியான்மலை பகுதிகளில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை கேட்டு பலர் விண்ணப்பித்திருந்தனர். அதில் சிலருக்கு மட்டும் உரிமைத்தொகை கிடைத்த நிலையில் பணம் கிடைக்காதவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தனர்.

ஆனாலும் அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை. இதனால் இ-சேவை மையங்களில் தங்களின் தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்றும் பரிசீலனையில் உள்ளது என்றும் மேல் முறையீடு செய்யவும் என்றும் சொல்கிறார்கள். இதையடுத்து மேல் முறையீடு செய்து இந்த மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.

எனவே தகுதியான பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி காட்டுப்பட்டி, உருவம்பட்டி, சேரானூர், மரிங்கிப்பட்டி, பின்னங்குடி, ஆணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் வராததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் புதுக்கோட்டை பரம்பூர் சாலையில் குடுமியான்மலை கடைவீதியில் சாலை மறியல் செய்தனர்.

தகவல் அறிந்த குடுமியான்மலை வருவாய் ஆய்வாளர் சரோஜா, பரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ரவி, கிளிக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமர் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்டோர் சாலை மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1/2 மணி நேரத்திற்கு மேலாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com