வீட்டின் முன்பு செல்போனில் பேசி கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதி

பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். பாம்புடன் சித்ராவை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர்.
வீட்டின் முன்பு செல்போனில் பேசி கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதி
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சித்ரா (வயது 35). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு உறவினரிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சித்ராவை பாம்பு ஒன்று கடித்து விட்டு சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது பாம்பு கடித்ததாக அவர் கூறினார்.

இதையடுத்து அவர்கள் பாம்பை தேடியபோது புதரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அந்த பாம்பை அவர்கள் பிடித்து ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டனர். பின்னர் அவர்கள் பாம்புடன் சித்ராவை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடித்த பாம்புடன் பெண் ஆஸ்பத்திரிக்கு வந்ததால் அங்கிருந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com