search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமான ஒரு மாதத்தில் சோகம்- வரதட்சணை கொடுமையால் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    திருமணமான ஒரு மாதத்தில் சோகம்- வரதட்சணை கொடுமையால் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

    • திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்திரவிடப்பட்டு உள்ளது‌.
    • இன்று ஆர்.டி.ஓ, வசுமதியின் உறவினர்களிடம் விசாரணை நடத்துகிறார். அந்த அறிக்கையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சிஎச்பி காலனி பகுதியைச் சேர்ந்தவர் அத்தியப்பன். லாரி டிரைவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் வசுமதி (வயது 23). என்ஜினீயரான இவருக்கும், நாமக்கல் நல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் என்ஜினீயரான வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி திருமணம் நடந்தது.

    இந்த நிலையில், கணவன் வினோத் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன் சந்தேகப்படுவதாகவும் வசுமதி தனது தந்தை அத்தியப்பனிடம் கூறியுள்ளார். இதை அடுத்து, அத்தியப்பன், தனது மகளை திருச்செங்கோட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.

    தந்தை வீட்டிற்கு வந்த பின்பு, மனமுடைந்து காணப்பட்ட வசுமதி, கடந்த 30-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மகளை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வசுமதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி வசுமதி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து உறவினர்கள் கதறி துடித்தனர்.

    இது குறித்து அத்தியப்பன் திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, வசுமதியின் கணவர் வினோத், அவருடைய தந்தை சுப்பிரமணி, தாயார் அமுதா, தங்கை காவியா ஆகிய 4 பேர் மீதும் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துதல் மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத் உள்பட 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்திரவிடப்பட்டு உள்ளது‌. இதையடுத்து இன்று ஆர்.டி.ஓ, வசுமதியின் உறவினர்களிடம் விசாரணை நடத்துகிறார். அந்த அறிக்கையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள வசுமதியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். வினோத் உள்பட 4 பேரையும் கைது செய்தால் தான், அவரது உடலை வாங்குவோம் என்று வசுமதியின் உறவினர்கள் கூறி வருகிறார்கள். இதனால் 2-வது நாளாக வசுமதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×