search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்கும் கடிகாரம்- விழுப்புரம் மாணவிகள் கண்டுபிடிப்பு

    • விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் உள்ள மக்கள் இன்னும் செல்போன் வசதி கூட இல்லாமல் உள்ளனர்.
    • செல்போன் வசதி இருந்தால் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம்-புதுவை சாலையில் காந்தி சிலை அருகில் உள்ள திரு.வி.க. சாலையில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பபள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு கடந்த ஆண்டு ராஜஸ்ரீ, நிவேதா ஆகிய 2 மாணவிகள் பிளஸ்-2 படித்தனர். அவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் எச்சரிக்கை கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி கடிகாரம் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த கடிகாரத்தில் குளோபல் புரொடக்ஷன் சிஸ்டம் (ஜி.பி.எஸ்.) மற்றும் சிம்கார்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தை கையில் அணிந்திருந்த போது யாராவது தங்களை நெருங்கி வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றாலோ அல்லது நகைகளை பறிக்க வந்தாலோ இந்த கடிகாரத்தில் பொருத்தப்பட்டுள்ள பட்டனை அழுத்தினால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

    மேலும் அலாரம் அடிக்கும் வகையிலும் உருவாக்கியுள்ளனர். இந்த அலார சத்தத்தினால் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து காப்பாற்றும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாணவிகள் ராஜஸ்ரீ, நிவேதா ஆகியோர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறார். அதன்படி நாங்களும் அறிவுப்பூர்வமாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் உள்ள மக்கள் இன்னும் செல்போன் வசதி கூட இல்லாமல் உள்ளனர். செல்போன் வசதி இருந்தால் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிப்பார்கள். ஆனால், கிராம மக்களிடம் போதிய செல்போன் வசதி இல்லாததால் நாங்கள் புதிதாக இந்த கருவியை கண்டு பிடித்துள்ளோம்.

    எங்களுடைய இந்த கண்டுபிடிப்புக்கு பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா, அறிவியல் ஆசிரியை ஜோசப்பின் ஆகியோர் ஊக்கமளித்தார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தலைமை ஆசிரியை சசிகலா கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் அறிவியல் கண்டு பிடிப்புகளை ஊக்குவிக்கும்படி அறிவித்து உள்ளார். அதன்படி எங்கள் பள்ளி மாணவிகள் அறிவுபூர்வமாக கண்டு பிடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.

    கடந்த ஆண்டு தமிழகத்தில் 26 ஆயிரம் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 10 புதிய கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் எங்கள் பள்ளி மாணவிகள் கண்டுபிடித்த கைக்கடிகாரமும் இடம் பிடித்துள்ளது. இதற்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பு இந்த மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கலெக்டர் இந்த கேடயத்தை வழங்கினார்.

    இந்த கண்டுபிடிப்பு தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அறிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவிகளை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×