search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கவிதை வரிகளுக்கு குரல் கொடுத்த வாணி ஜெயராம்- திருமண நாளில் மரணத்தை தழுவிய சோகம்
    X

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கவிதை வரிகளுக்கு குரல் கொடுத்த வாணி ஜெயராம்- திருமண நாளில் மரணத்தை தழுவிய சோகம்

    • வாணி ஜெயராம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.
    • எந்த மொழியில் பாடல் பாடினாலும், அந்த மொழியின் தொன்மையை உணர்ந்து, அதன் அர்த்தம் மாறாமல் பாடுவதில் வல்லவர்.

    வசீகர குரலுக்கு சொந்தகாரரான வாணி ஜெயராமை விரும்பாத இசை ரசிகர்களே இருக்க முடியாது.

    வாணி ஜெயராம், பள்ளி பருவத்திலேயே இசை மீது அதிக ஆர்வம் காட்டினார். அப்போதே வகுப்பில் மாணவிகள் மத்தியில் இனிமையான பாடல்களை பாடி வியக்க வைப்பார்.

    மேலும் தனது எண்ணங்களை ஓவியமாக தீட்டி ஆசிரியைகளிடம் காட்டுவார். அதனை கண்டு வியந்து போன ஆசிரியர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அவர் மேலும் அந்த துறையில் சிறந்து விளங்க பாராட்டவும் செய்தனர்.

    இளமையிலேயே பாட்டிலும், இசையிலும் சிறந்து விளங்கிய வாணி ஜெயராம், திருமணத்திற்கு பிறகுதான் சினிமா துறையில் பாடல்கள் பாட தொடங்கினார். அவரது பாடலையும், இனிமையான குரல் வளத்தையும் பலரும் பாராட்டினர்.

    இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் ஒருவர். அவர் வாணி ஜெயராமை ஒருமுறை தனது அலுவலகத்திற்கு அழைத்தார்.

    இருவரும் வாணி ஜெயராம் பாடிய பாடல்கள் குறித்து பல மணி நேரம் பகிர்ந்து கொண்டனர். வாணி ஜெயராமின் குரலை பாராட்டிய அப்துல் கலாம், அவரிடம் தனது கவிதை தொகுப்பு ஒன்றை கொடுத்தார்.

    அந்த கவிதை தொகுப்பை படித்து பார்த்த வாணி ஜெயராம் மிகவும் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த அப்துல் கலாம், இந்த கவிதை தொகுப்பை உங்கள் குரலில் பாடலாக பதிவு செய்து தர முடியுமா? என்று கேட்டார்.

    அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட வாணி ஜெயராம், அப்துல் கலாமின் கவிதை வரிகளுக்கு தன் இனிய குரலால் உயிரூட்டினார். இதற்காக அப்துல் கலாம், வாணி ஜெயராமை வெகுவாக பாராட்டினார்.

    வாணி ஜெயராமும் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். அவரும் பல கவிதைகளை எழுதி, இசை அமைத்துள்ளார். அவற்றை கேசட்டுகளாகவும் வெளியிட்டுள்ளார்.

    இவ்வாறு வெளியான கவிதைகளில் 30 கவிதைகளை தொகுத்து புத்தகமாகவும் வெளியிட்டார். அது ஒரு குயிலின் குரல் கவி தாய் வடிவில் என்ற பெயரில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது.

    வாணி ஜெயராம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். எந்த மொழியில் பாடல் பாடினாலும், அந்த மொழியின் தொன்மையை உணர்ந்து, அதன் அர்த்தம் மாறாமல் பாடுவதில் வல்லவர்.

    பாடல் வரிகளின் பொருள் உணர்ந்து அவர் பாடுவதால் அந்த பாட்டும் உயிரோட்டமாக இருக்கும். இதற்காக அவர் ரொம்பவே மெனக்கெடுவார். இது பற்றி வாணி ஜெயராம் ஒருமுறை கூறும்போது, எனக்கு மலையாள பாடல்கள் பாடுவதில் தான் சிரமம் என்று கூறியிருந்தார். ஆனால் மலையாள இசையமைப்பாளர்கள், ரசிகர்கள் கூறும்போது, வாணி ஜெயராமை மலையாளி என்றே கூறுவார்கள். அந்த அளவுக்கு அவர் மலையாள பாடல்களை பாடி இருந்தார்.

    கணவர் ஜெயராம் இறந்த பிறகு அவர் வாழ்ந்த வீட்டிலேயே வசிக்க வேண்டும் என்பதில் வாணி ஜெயராம் பிடிவாதமாக இருந்தார். உறவினர்கள் அவரை தங்களோடு வந்து விடும்படி அழைத்த பின்னரும் செல்லாமல் சென்னை நுங்கம்பாக்கம் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    அங்கு கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுப்பது, ஓவியம் வரைவது, வண்ணம் தீட்டுவது என பொழுதை கழித்தார். அதோடு எம்பிராய்டரியிலும் ஆர்வம் காட்டினார். இதனை செய்யும் போது மனதுக்கு நிம்மதியாக இருப்பதாக தனது பணிபெண்ணிடம் கூறுவார்.

    வாணிக்கு 1968-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந்தேதி ஜெயராமை திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஈருடல் ஓருயிராக வாழ்ந்தனர். வாணிக்கு ஜெயராம் எல்லாமுமாக இருந்தார். அவரது இசை வாழ்க்கையில் பெற்ற பெரும் பாராட்டுக்கும் ஜெயராம் காரணமாக இருந்தார்.

    இதனால் கணவரின் மேல் வாணி கொள்ளை அன்புடன் இருந்தார். இந்த நிலையில்தான் 2018-ம் ஆண்டு ஜெயராம் திடீரென இறந்த போது வாணி இடிந்து போனார். அதன்பின்பு பொது வெளி நிகழ்ச்சிகளை குறைத்து கொண்டார். கணவர் வாழ்ந்த வீட்டிலேயே வாழ தொடங்கினார்.

    கணவர் இறந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களின் திருமணம் நடந்த அதே பிப்ரவரி 4-ம் நாள் வாணியின் உயிர் பிரிந்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    Next Story
    ×