search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி, காய்கறி விலை உயர்வால் எலுமிச்சை, புளி சாதத்துக்கு மாறிய நடுத்தர மக்கள்
    X

    தக்காளி, காய்கறி விலை உயர்வால் எலுமிச்சை, புளி சாதத்துக்கு மாறிய நடுத்தர மக்கள்

    • ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உள்ளது.
    • தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் விலை உச்சத்தை தொட்டு வருகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைவு எதிரொலியாக தக்காளி விலை உயரத் தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் ரூ.120 முதல் 130 வரை உயர்ந்து விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படும் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று ஈரோடு சம்பத் நகர் மற்றும் சத்தியமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பத் நகரில் 250 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் வீற்று தீர்ந்தன. இதேபோல் சத்தியமங்கலத்தில் 150 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் வீற்று தீர்ந்தன.

    நேற்று ஓசூரில் இருந்து விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் இன்று மற்ற பகுதியில் செயல்படும் உழவர் சந்தைகளில் தக்காளி மலிவு விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்திருந்தார்.

    ஆனால் இன்று ஓசூரில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய முடியாததால் தாளவாடியில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்கப்பட்டது. ஆனால் அதே நேரம் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.104-க்கு விற்கப்பட்டது.

    ஈரோடு சம்பத் நகரில் இன்று தோட்டக்கலைத்துறை சார்பாக 150 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இவை சில மணி நேரத்தில் வீற்றுத் தீர்த்து விட்டன. இதேப்போல் சத்தியமங்கலத்திலும் 100 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    இன்று முதல் கோபி, பெருந்துறை உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பாக ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு விற்கப்பட்டது. நாளை ஓசூரில் இருந்து மீண்டும் விவசாயிகளிடமிருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டால் விலை குறையும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்துள்ளார்.

    இதேப்போல் ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் விலை உச்சத்தை தொட்டு வருகின்றன.

    இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.110 -க்கு விற்பனை ஆனது. இதே போல் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று புதிய உச்சமாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 150 க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.10 அதிகரித்து ரூ.160-க்கு விற்பனை ஆனது.

    இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காய்கறிகள் விலை தொடர்ந்து வருவதால் மக்களின் கவனம் இப்போது கீரைகள் மீது திரும்பி உள்ளது. கீரை விலை மலிவாக இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். சிறுகீரை, மிளகு தக்காளி கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, செங்கீரை, முருங்கைக்கீரை ஆகிய கீரை ஒரு கிலோ ரூ.10 -க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் கரிசலாங்கண்ணி கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகிய கீரைகள் ஒரு கிலோ ரூ. 8-க்கு விற்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக கீரை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் எலுமிச்சம் பழம் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காய்கறியின் விலை உயர்வால் பொதுமக்கள் எலுமிச்சம் பழத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு எலுமிச்சம் பழம் ரூ.4 முதல் 7 வரை விற்கப்படுகிறது. தக்காளி, காய்கறி விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தற்போது எலுமிச்சை சாதம், புளி சாதத்திற்கு மாறி உள்ளனர்.

    Next Story
    ×