search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி அருகே கட்டிட தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்ற மனைவி
    X

    தென்காசி அருகே கட்டிட தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்ற மனைவி

    • திருமலாபும் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் கட்டிட தொழிலாளி.
    • திரவியகனி, அங்கு கிடந்த கல்லால் பாலசுப்பிரமணியனை முகத்தில் தாக்கினார்.

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர்-முதலியார்பட்டி சாலையில் அமைந்துள்ள திருமலாபும் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 48). கட்டிட தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    இவருக்கு திரவியகனி என்ற மனைவியும், சிவா (18), சிவின்(16) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இன்று அதிகாலை வீட்டு வாசலில் இருந்து சற்று தொலைவில் முகம் சிதைந்த நிலையில் படுகாயங்களுடன் பாலசுப்பிரமணியன் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கடையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மகேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது பாலசுப்பிரமணியனின் உடலுக்கு சற்று தொலைவில் கல் ஒன்று கிடந்தது.

    அந்த கல்லில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதுதொடர்பாக திரவியகனியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    பாலசுப்பிரமணியன் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று இரவும் வழக்கம்போல் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த திரவியகனி, அங்கு கிடந்த கல்லால் பாலசுப்பிரமணியனை முகத்தில் தாக்கினார்.

    இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் என்ற விபரம் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவரது மனைவி மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×