search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் பரப்பில் மயங்கி கிடந்த தம்பதிக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    மணல் பரப்பில் மயங்கி கிடந்த தம்பதிக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    • வயதான தம்பதி இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வயதான தம்பதி இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, உணவு, காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.

    இதனால் அங்குள்ள தமிழர்கள் பலர் அகதிகளாக தமிழகத்திற்கு வர தொடங்கினர். கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து தற்போது வரை ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு சுமார் 100 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

    இலங்கையில் இருந்து இரவு நேரத்தில் படகு மூலம் குடும்பம் குடும்பமாக வந்து தனுஷ்கோடி பகுதியில் உள்ள மணல்திட்டுகளில் தவித்தப்படி நின்ற அவர்களை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் எதிரே உள்ள மணல் திட்டில் வயதான தம்பதி இருவர் மயங்கி கிடந்தனர். இலங்கையில் இருந்து அகதியாக வந்த அவர்களை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டனர்.

    விசாரணையில் அவர்கள் இலங்கை மன்னார் மாவட்டம் பிருங்கன்பட்டியை சேர்ந்த சிவன் (வயது 82), அவரது மனைவி பரமேஸ்வரி (75) என்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் கூலி வேலை பார்த்து வந்த அவர்கள், அங்கு நிலவிய விலைவாசி உயர்வால் வாழ முடியாத நிலை ஏற்பட்டு தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

    அவர்களை படகில் அழைத்து வந்தவர்கள் இரவு நேரத்தில் ஆழம் குறைந்த தண்ணீரின் நடுவே இறக்கி விட்டு சென்றதால், வழி தெரியாமல் நடந்து வந்து மணல் திட்டு பகுதிக்கு வந்திருக்கின்றனர். பின்பு வயது முதிர்வு காரணமாக தொடர்ந்து செல்ல முடியாமல் மயங்கி விட்டனர்.

    அவர்கள் கிடந்த பகுதிக்கு ஆம்புலன்சு செல்ல முடியாது என்பதால் ஹோவர்கிராப்ட் கப்பல் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டு ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்பு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் வயதான தம்பதி இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வயதான தம்பதி இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×