

விழுப்புரம்:
புதுவை மாநிலத்தில் இருந்து பெரும்பாக்கம் வழியாக மதுபானம் கடத்தி வருவதாக போலீஸ் சூப்பிரண்டு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அவரது உத்தரவின் பேரில் திண்டிவனம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரேணுகா தலைமையில், ஏட்டு சம்பத் , போலீஸ்காரர் அம்பிகா ஆகியோர் பெரும்பாக்கம் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் வாகனங்களை தணிக்கை செய்தனர்.
அப்பொழுது ஒரு மினி லாரி வந்தது. அதனை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த லாரியில் புதுச்சேரி மது பாட்டில்கள் 25 அட்டை பெட்டிகள் இருந்தது தெரியவந்தது. அதில் 24 அட்டைப் பெட்டிகளில் ப்ளூ கிரேப் பிராந்தி மற்றும் மேக் டோல் ஒரு அட்டைப்பெட்டி இருந்தது. மொத்தம் 1200 பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் இதனை மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவர் புதுவையில் இருந்து கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது. உடனே லாரி மற்றும் மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். கைதான ரமேஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.