search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எட்டயபுரம் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    எட்டயபுரம் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களை கட்டும்.
    • வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டுவரப்படும்.

    நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க, விற்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    இந்தாண்டு பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. 16-ம் தேதி இறைச்சி விற்பனை அதிகமாக நடைபெறும்.

    இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று மதியம் முதல் ஆட்டுச்சந்தை களை கட்டியது. தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக ஆட்டுச் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக வந்த நிலையில் இன்று சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    மேலும் கேரளா மாநிலத்தில் இருந்தும் சிலர் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்தனர். வழக்கமான நாட்டு ரகங்களுடன் ஹைதராபாத் ரக காது ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    மலப்பாரி, பிட்டெல், சிரோகி, தலைச்சேரி, ஜம்னாபாரி உள்ளிட்ட வெளிமாநில ஆடு வகை ரகங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

    10 கிலோ எடை கொண்ட நாட்டு ரக ஆடுகள் ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. இது கடந்த வாரங்களில் விட சற்று விலை அதிகம் தான் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    தொடர் மழையினால் கடந்த 2 வாரங்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில் பொங்கல் பண்டிகை வியாபாரம் விறுவிறுப்பாக இருந்ததாகவும், ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது.

    கறிக்காக வாங்கும் ஆடுகள் விற்பனை அதிகமாக காணப்பட்டதாகவும், ரூ. 7 கோடி வரைக்கும் இந்த பொங்கல் பண்டிகைக்கு விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கேரளா மாநிலத்தில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த கால்நடை வளர்ப்பவர்கள் கூறும்போது, எட்டயபுரம் சந்தையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

    இன்று முதன்முறையாக ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இன்றைக்கு கூட்டமும் அதிகமாக உள்ளது. விற்பனையும் நன்றாக உள்ளது என்றனர்.

    Next Story
    ×