

ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் நிலை கண்காணிப்பு குழு, பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்கள், மது பானங்களையும் போலீசார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.41 லட்சத்து 53 ஆயிரத்து 370 பணம் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இதுவரை 91 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.63 ஆயிரத்து 960 ஆகும். இதே போல் 1850 கிராம் கஞ்சா, புகையிலை பொருட்கள், தடை செயய்ப்பட்ட பாக்கு வகைகள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.22,500 ஆகும்.