search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை- மீண்டும் 9 ரவுடிகள் திருச்சி கோர்ட்டில் ஆஜர்
    X

    ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை- மீண்டும் 9 ரவுடிகள் திருச்சி கோர்ட்டில் ஆஜர்

    • சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை அதிகாரியும், எஸ்.பி.யுமான ஜெயக்குமார் தொழிலதிபர் வழக்கு தொடர்பாக ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி தருமாறு மனு தாக்கல் செய்தார்.
    • வழக்கு விசாரணையின் போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நம்பத்தகுந்த, ஆனால் உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் 13 ரவுடிகள் மீது விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்று மனுவில் தெரிவித்து இருந்தார்.

    திருச்சி:

    தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

    சி.பி.சி.ஐ.டி. மற்றும் சி.பி.ஐ. விசாரணையில் துப்பு துலங்காத நிலையில் இந்த கொலை வழக்கு சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.

    இவ்வழக்கில் திடீர் திருப்பமாக, சென்னையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்கள் உள்பட பிரபல ரவுடிகள் 20 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையை கடந்த 22-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி ஷகில் அக்தர் நடத்தினார். அதன் அடிப்படையில் அதில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    பின்னர் சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்யராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்போவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவ குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், லெப்ட் ரவி ஆகிய 13 ரவுடிகளுக்கு இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி 13 பேரும் கடந்த 1-ந்தேதி திருச்சி கோர்ட்டுக்கு வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார், புலனாய்வுக் குழு விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. மதன்குமார் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முறையாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கினை 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து இன்று கடலூர் லெப்ட் செந்தில், திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், திண்டுக்கல் தினேஷ் ஆகிய 4 ரவுடிகள் தவிர்த்து மீதமுள்ள 9 ரவுடிகளும், திருச்சி 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகினர்.

    அதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை அதிகாரியும், எஸ்.பி.யுமான ஜெயக்குமார் தொழிலதிபர் வழக்கு தொடர்பாக மேற்கண்ட ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி தருமாறு மனு தாக்கல் செய்தார். அதில் வழக்கு விசாரணையின் போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நம்பத்தகுந்த, ஆனால் உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் மேற்கண்ட, 13 ரவுடிகள் மீது விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்று மனுவில் தெரிவித்து இருந்தார்.

    மேலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடிகள் அனைவரும் ஒப்புக்கொண்டு, கையெழுத்திட்டு தந்திருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ரவுடிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் உண்மை கண்டறியும் சோதனை மருத்துவர்கள் மற்றும் வக்கீல்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் மற்றும் உண்மை கண்டறியும் சோதனையின்போது என்னென்ன கேள்விகள் கேட்க போகிறார்கள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவக்குமார் மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் ரவுடிகள் தரப்பில் ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னர் நடைபெறும் வாதங்களின் அடிப்படையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிபதி அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×