search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீண்டும் வேகமெடுக்கும் ராமஜெயம் கொலை வழக்கு- உண்மை கண்டறியும் சோதனைக்கு பிரபல ரவுடிகள் 12 பேர் ஒப்புதல்
    X

    மீண்டும் வேகமெடுக்கும் ராமஜெயம் கொலை வழக்கு- உண்மை கண்டறியும் சோதனைக்கு பிரபல ரவுடிகள் 12 பேர் ஒப்புதல்

    • சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி.ஜெயக்குமார், ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்குமாறு மனுதாக்கல் செய்தார்.
    • ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை.

    திருச்சி:

    தி.மு.க. முதன்மைச்செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

    இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர். அது தொடர்பாக உரிய அனுமதி கேட்டு புலனாய்வுக்குழுவினர் திருச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இதில் மோகன்ராம், தினேஷ், நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா என்ற குணசேகரன் ஆகியோரும், கடலூர் சிறையிலிருந்த செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1-ந்தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.

    பின்னர் வழக்கு 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்றைய தினம் சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி.ஜெயக்குமார், ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்குமாறு மனுதாக்கல் செய்தார். அதில் ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை.

    எனவே இது முறையாக பின்பற்றப்பட வாய்ப்பில்லை. என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து அந்த வழக்கை 14-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

    பின்னர் கடந்த 14-ந் தேதி சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்ற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகிய 8 பேர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர்.

    தென்கோவன் என்ற சண்முகம் என்பவர் மட்டும் இந்த சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கில் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்கள் இன்று (17-ந்தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்படி இன்று அந்த நான்கு பேரும் திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளிப்பது தொடர்பான முடிவை வருகிற 21-ந்தேதி அளிப்பதாக நீதிபதி சிவக்குமார் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு வருகிற 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    அன்றைய தினம் சம்மதம் தெரிவித்துள்ள 12 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்து ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அவ்வாறு அனுமதி அளித்தவுடன் டெல்லியில் சிறப்பு அனுமதி பெறப்பட்டு விரைவில் இந்த 12 பேருக்கும் சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.

    ராமஜெயம் கொலை வழக்கில் உள்ளூர் போலீசார், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. விசாரணையில் இதுவரை துப்பு துலங்காத நிலையில், சிறப்பு புலனாய்வுக்குழு மூலம் கொலை குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் வழக்கு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

    Next Story
    ×