மணவாளக்குறிச்சி அருகே கர்ப்பிணி பெண் போலீஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி

முதலுதவி சிகிச்சைக்கு பிறகு உஷாவை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உஷாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உஷா பரிதாபமாக இறந்தார்.
உஷா
உஷா
Published on

நாகர்கோவில்:

மணவாளக்குறிச்சி அருகே கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி உஷா (வயது 38).

இவர் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தற்பொழுது உஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று காலை வழக்கம் போல் உஷா மொபட்டில் வேலைக்கு சென்றார். வேலை முடிந்து இரவு 7 மணியளவில் வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார்.

கட்டைக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரோட்டை கடந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது மொபட்டை திருப்பினார். அப்போது அந்த வழியாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் உஷாவின் மொபட் மீது வேகமாக மோதியது. இதில் உஷா தூக்கி வீசப்பட்டார்.

8 மாத கர்ப்பிணியாக இருந்த உஷாவிற்கு தலை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது உறவினர்களும் அங்கு வந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உஷாவை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

முதலுதவி சிகிச்சைக்கு பிறகு உஷாவை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உஷா பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து உஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் சிக்கி 8 மாத கர்ப்பிணி பலியான சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல் நிலை காவலர் உஷா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

பலியான முதல் நிலைக் காவலர் உஷா நெல்லை மாவட்டம் மற்றும் நாகர்கோவில் ஆயுதப்படை போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com