

பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ஏனம்பாக்கம் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுமிர். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது தந்தையும் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில், நேற்று மாலை இவரது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து விட்டு உறவினர்கள் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் உறவினர்கள் புறப்பட்டு சென்றனர். அவர்களை வழியனுப்ப வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்தனர்.
அப்போது திடீரென வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தீ மளமளவென குடிசையில் பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து தேர்வாய் கண்டிகை கிராமத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
எனினும் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றிய போது சுமிர், அவரது மனைவி உள்பட 5 பேரும் வெளியே நின்றதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.