search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நர்சுக்கு மதுபானம் கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம்- அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
    X

    நர்சுக்கு மதுபானம் கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம்- அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

    • இளம்பெண் நேர்காணலுக்கு வேலூர் செல்வது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நண்பரான சரவணன் என்பவரிடம் தெரிவித்து இருந்தார்.
    • இதற்கிடையே சரவணன் தனது நண்பர்களான சாரதி, சூர்யபிரகாஷ் ஆகியோருடன் காரில் காஞ்சிபுரம் வந்து இளம்பெண்ணை சந்தித்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள வடபாதி கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் நர்சிங் டிப்ளமோ முடித்து உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு காலி பணியிடம் இருப்பதை அறிந்த இளம்பெண் அதில் சேர முடிவு செய்தார்.

    இதையடுத்து நர்சு பணிக்கான நேர்காணலுக்கு வேலூர் செல்வதற்காக இளம்பெண் தனது தோழிகள் மேலும் 2 பேருடன் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.

    அப்போது இளம்பெண் நேர்காணலுக்கு வேலூர் செல்வது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நண்பரான சரவணன் என்பவரிடம் தெரிவித்து இருந்தார்.

    இதற்கிடையே சரவணன் தனது நண்பர்களான சாரதி, சூர்யபிரகாஷ் ஆகியோருடன் காரில் காஞ்சிபுரம் வந்து இளம்பெண்ணை சந்தித்தார்.

    அப்போது ஓட்டலில் சாப்பிட்டு செல்லலாம் என்று இளம்பெண்ணை, சரவணன் அழைத்தார்.

    இதைத்தொடர்ந்து இளம்பெண் தனது உடன் வந்த 2 தோழிகளையும் வேலூர் செல்லும்படி தெரிவித்தார்.

    தான் அடுத்த பஸ்சில் வருவதாக கூறி இளம்பெண், நண்பரான சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் வந்த காரில் சென்றார்.

    ஆனால் மதுபோதையில் இருந்த சரவணன் உள்பட 3 பேரும், இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் காரிலேயே இளம்பெண்ணை செங்கல்பட்டுக்கு கடத்தி வந்தனர்.

    செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரத்தில் சாலையோரம் உள்ள முட்புர் அருகே காரை நிறுத்தி இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மதுபானம் ஊற்றினர்.

    அவர்களிடம் இருந்து இளம்பெண் தப்பிக்க முயன்றும் முடியவில்லை.

    இதையடுத்து போதை மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணை சரவணன், அவரது கூட்டாளிகள் சாரதி, சூர்ய பிரகாஷ் ஆகிய 3 பேரும் கற்பழித்தனர்.

    பின்னர் இளம்பெண்ணை சாலையோர முட்புதரில் வீசிவிட்டு அங்கிருந்து 3 பேரும் காரில் தப்பி சென்று விட்டனர்.

    மறுநாள் காலை எழுந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து அலறி துடித்தார். அங்கிருந்து வீட்டுக்கு வந்த அவர் தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார்.

    இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவான அவரது கூட்டாளிகள் சாரதி, சூர்ய பிரகாஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இவர்களில் சரவணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவர் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    தலைமறைவாக உள்ள சாரதி கல்லூரி மாணவர் ஆவார். அவர் தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சூர்யபிரகாஷ் வக்கீல் ஆவார்.

    அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு, காயப்படுத்துதல், மிரட்டல், பெண் வன்கொடுமை ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே தனக்கு நேர்ந்த கொடுமையால் இளம்பெண் மிகவும் மனமுடைந்து இருந்தார். நேற்று காலை அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேலைக்காக சென்றபோது நர்சை நண்பரே கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி கற்பழித்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×