search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் அருகே போலீஸ் சீருடையில் வந்து பைக் திருடிய வாலிபர் கைது
    X

    நாகர்கோவில் அருகே போலீஸ் சீருடையில் வந்து பைக் திருடிய வாலிபர் கைது

    • வாலிபர் நிறுத்தி சென்ற மோட்டார் சைக்கிளும் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே தெற்கு திருப்பதி சாரத்தைச் சேர்ந்தவர் பெர்னாட்.

    இவர் திருப்பதி சாரம் 4 வழிச்சாலை பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 18-ந்தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு செல்ல பெர்னாட் தயாரானார்.அப்போது போலீஸ் உடையில் வந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் காலியாகிவிட்டதாகவும் பெட்ரோல் வாங்கி வருவதற்கு மோட்டார் சைக்கிள் தருமாறு பெர்னாட்டிடம் கேட்டுள்ளார்.

    போலீஸ் சீருடையில் இருந்ததையடுத்து பெர்னாட் மோட்டார் சைக்கிளை கொடுத்து அனுப்பினார். நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதையடுத்து பெர்னாட் வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் பெர்னாட்டிடம் போலீஸ் சீருடையில் வந்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வாலிபர் நிறுத்தி சென்ற மோட்டார் சைக்கிளும் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது.

    கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் திருமங்கலம் பகுதியில் போலீஸ் அடையாள அட்டையுடன் வாலிபர் ஒருவர் நேற்றிரவு சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் அவர் நாகர்கோவிலிலும் மோட்டார் சைக்கிள் திருடியிருப்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு வேறு எங்காவது வழக்கு உண்டா மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குடன் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×