

கோவை:
கோவை சின்னியம்பாளையம் பிரபல தனியார் ஓட்டல் அருகே பொள்ளாச்சியில் இருந்து சொகுசு காரில் 2 மாணவர்கள் மதுபோதையில் வந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் படுகாயமடைந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாகச் சென்றவர்கள் விபத்தில் காயமடைந்த வாலிபரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். காரை ஓட்டி வந்த மாணவர்களிடம் மக்கள் விசாரணை செய்தனர்.
அப்போது அவர்கள் மது போதையில் இருந்ததும், போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மாணவர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது,
இதுபோன்று போதையில் கல்லூரி மாணவர்கள் சொகுசு கார்களை இயக்கி வருகின்றனர், போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும் என்றனர்.