search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகங்கை அருகே விவசாயி கொலையில் தாய்-மகன் கைது
    X

    சிவகங்கை அருகே விவசாயி கொலையில் தாய்-மகன் கைது

    • கொலை தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • அக்கம்பக்கத்து வீட்டினர் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ள வீரவலசை கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(வயது 35). விவசாயியான இவரது வீட்டின் அருகே மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏலம்மாள் (65) என்ற மனைவியும், கோவிந்தசாமி (46) என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று ஏலம்மாள் தனது வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தின் ஓலையை ஆட்களை வைத்து வெட்டினார். அப்போது அந்த ஓலை முனியசாமி வீட்டுக்கு செல்லும் மின்வயர் மீது விழுந்தது. இதன் காரணமாக முனியசாமி வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த முனியசாமி, ஏலம்மாளிடம் அதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை சமரசம் செய்தனர்.

    ஆனாலும் பிரச்சினை நீடித்ததால் இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து இனிமேல் தகராறு செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் கோபத்தில் இருந்தனர்.

    போலீஸ் நிலையத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த ஏலம்மாள், அவரது மகன் கோவிந்தசாமி ஆகியோர் மீண்டும் முனியசாமியிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே தாய், மகன் ஆகியோர் கத்தியால் முனியசாமியை சரமாரியாக குத்தினர்.

    இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி முனியசாமி பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    முனியசாமியை கத்தியால் குத்திக்கொன்ற ஏலம்மாள், கோவிந்தசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அக்கம்பக்கத்து வீட்டினர் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×