search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிளால் மோதி பணம் பறிக்க முயற்சி- ஆட்டோ டிரைவரை கடத்தி தாக்குதல்
    X

    பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிளால் மோதி பணம் பறிக்க முயற்சி- ஆட்டோ டிரைவரை கடத்தி தாக்குதல்

    • ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பாலமுருகனை சரமாரியாக தாக்கி ஆட்டோவுடன் கடத்தி சென்றனர்.
    • சிறிது தூரம் சென்றதும் பாலமுருகனை கீழே தள்ளிவிட்டு ஆட்டோவை மட்டும் கடத்திச் சென்று விட்டனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(34) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு திருவேற்காடு அருகே பருத்திப்பட்டு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ஆட்டோ மீது தங்களது மோட்டார் சைக்கிளை மோதினர். பின்னர் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்து இருப்பதாக கூறி ஆட்டோ டிரைவர் பாலமுருகனிடம் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பாலமுருகனை சரமாரியாக தாக்கி ஆட்டோவுடன் கடத்தி சென்றனர். சிறிது தூரம் சென்றதும் பாலமுருகனை கீழே தள்ளிவிட்டு ஆட்டோவை மட்டும் கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து அறிந்ததும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கடத்தப்பட்ட ஆட்டோவை தேடிய போது அது திருவேற்காடு பகுதியில் நிறுத்தப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆட்டோவை மீட்க சென்றபோது அங்கிருந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். இதில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் சிலருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாவும் தெரிகிறது.

    இதுகுறித்து திருவேற்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள், சங்க நிர்வாகிகள் திருவேற்காடு பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    Next Story
    ×